சனி, ஜூலை 07, 2012

உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம்...

"நமது சமுதாயத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மருத்துவர்கள், நம்மை முற்றிலும் நிலைதவறி போகும்படி செய்து விட்டனர். நோய்கள் எவ்விதம் உருவாகின்றன? நிச்சயமாக நமது அசட்டையினாலோ அல்லது மிதமிஞ்சிய போகங்களினாலோ நோய்கள் உருவாகின்றன. நான் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிறேன். எனக்கு அஜீரணம் உண்டாகி, மருத்துவரிடம் போகிறேன். மருத்து கொடுக்கிறார்; குணம் அடைகிறேன். மறுபடியும் நான் அதிகமாக உணவு உட்கொள்கிறேன். மருத்துவரின் மருந்தையும் உட்கொள்கிறேன். ஆனால், முதல் தடவையிலேயே மருந்தை உட்கொள்ளாதிருந்தால், எனக்கு உரிய தண்டனையை அனுபவித்திருப்பேன். மறுபடியும் மிதமிஞ்சி உண்டிருக்க மாட்டேன். மருத்துவர் குறுக்கிட்டு, மிதமிஞ்சி நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். மருத்துவர் தலையிடாமல் இருந்திருந்தால், இயற்கை தன் வேலையை செய்திருக்கும். என்னை நானே அடக்கியாளும் ஆற்றலும், எனக்கு உண்டாகியிருக்கும்.

மகாத்மா காந்தி

உங்களுக்கு ஓரு இரகசியம் தெரியுமா?

நமக்கு உடல் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நம் உடல் இலேசாக இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  நம் உடலில் ஏதாவது ஏற்பட்டுவிட்டால் மனம் அதை பற்றியே சிந்தனையில் இருக்கும். சரியானவுடன் அதைபற்றி மறந்துவிடும்.
நம் உடலோ மனமோ அடிப்பட்டுவிட்டால் அதைச் சுற்றியே நம் முழு ஆற்றலும் பாயும்.

உங்களுக்கு ஓரு இரகசியம் தெரியுமா? உடலில் எந்த நோய் இருந்தாலும் அதை மருந்து கொடுத்து சரி செய்யும் காலத்தைவிட, அதை தொந்தரவு செய்யாமல் இயற்கையிடமே விட்டுவிட்டால் ஆகும் காலம் குறைவு.

இப்பொழுது நம் உடலில் நோய் வந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். உடல் சார்ந்த பிரச்னை என்று எடுத்துகொண்டால் வலி, மருந்துகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடும் முயற்சிகள். மனம் சார்ந்தது என்றால் அந்த நோயை பற்றிய பயம். அதைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் கருத்துக்கள். மற்றவர்கள் கூறிய சில தகவல்கள். இவை அனைத்தும் அந்த நோயை அதிகப்படுத்துகின்றன.

இது நோய்க்கு மட்டுமல்லாமல், கடந்தகால மனக்காயங்கள், அவமானங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதும், அக உணர்ச்சிகளை நாம் கையில் எடுத்துக்கொண்டு சரிசெய்ய முற்படுவதும் தான் பிரச்னையே தவிர. அது குறித்து நாம் எதுவும் செய்யாமல் (உள் நிலையில் மட்டும்) இருந்தாலே போதுமானது.

எனக்கு நோய் வந்துவிட்டது. நீங்கள் சொல்லியபடி எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து இருக்க சொல்கிறீர்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த கேள்வி உங்கள் மனதில் எழுந்தால் இதை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் வெளி சார்ந்து எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். அதனால் ஏற்படும் உள்நிலை (சோதனைகள் / அவமானங்கள் / கோபம் இன்னும் பிற...) சார்ந்த உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதுகுறித்து விவாதிக்கவோ மறுபரிசீலனை செய்யவோ வேண்டாம். அதனால் எந்த பயனும் இல்லை. மாறாக குழப்பமே மிஞ்சும். உள்நிலையில் நீங்கள் செய்யவேண்டிய ஒரே விஷயம் வெளிநிலையில் நீங்கள் செய்யவேண்டிய வேலையை திறம்பட செய்ய நீங்கள் உள்நிலையை பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வளவுதான்.

நடந்தது நடந்தது தான்; முடிந்தது முடிந்தது தான்; அதை மாற்றி அமைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு அதனோடு முரண்படாமல் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மனம் இலேசாகிவிடும். மனம் இலேசாகிவிட்டால் உடலும் புத்துணர்வோடு இருக்கும். இயற்கைதான் பெரியது என உணர்ந்து சரணாகதி செய்வது மட்டுமே போதுமானது. நீங்கள் பரிபூரண ஆரோக்கியவானாக மாறிவிடலாம். எனவே ஆரோக்கியமாக வாழ்வதும் மன நலத்தோடு வாழ்வதும் அதிசுலபம் தான்.

சுரேஷ் மாணிக்கம்

ஆரோக்கியம் - சில தகவல்கள் 7

கேன்சர்... உங்கள் கவனத்துக்கு!

நல்ல உணவுப் பழக்கத்தால் கேன்சரே வராமல் தடுத்துவிட முடியுமா?'' என்ற கேள்விக்கு, 'முடியும்'. அது எப்படி முடியும்?

உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

* கேன்சரை உண்டாக்கக் கூடிய மோசமான உணவுகள்.

* கேன்சர் அபாயமற்ற நல்ல உணவுகள்.

* கேன்சரைத் தடுக்கும் / குணமாக்கும் அற்புத உணவுகள்.

கேன்சரை உண்டாக்கும் உணவுகள்...

பலமுறை உபயோகித்த எண்ணெயிலயே மீண்டும் வறுக்கப்பட்ட/ பொறிக்கப்பட்ட பதார்த்தங்கள், அதிக காரம்/ எண்ணெய்ப்பசை கொண்ட கவர்ச்சிகர உணவுகள், துரித உணவு வகைகள், 'ஜங்க் ஃபுட் நொறுக்குத் தீனிகள்' என விரிகிறது பட்டியல்.



சுருக்கமாகச் சொல்வதானால், ஜீரணிக்கக் கடினமான 'ஹெவி' உணவுகள் அனைத்துமே கேன்சரை விளைவிக்கக்கூடிய ஆபத்து உள்ளவைதான். உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் இந்த உணவுகளில் நிறைந்துள்ளன. உணவில் உள்ள எல்லா சத்துக்களையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நம் உடல், இந்தக் கொழுப்பு விஷயத்தில் மட்டும் குழப்பம் அடைந்து, அவற்றை தனியே சேர்த்து வைக்கிறது. அத்துமீறி ஒரு நாட்டுக்குள் அந்நியர் புகுந்துவிட்டால், நாட்டுக்கு கெடுதல்தான் செய்வார்கள். அதையேதான் அந்தக் கொழுப்புகளும் நம் உடலுக்குச் செய்கின்றன. கேன்சர் வரைக்கும் போய்விடுகிறது.

எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சமையல், நீராவியில் வேக வைக்கப்பட்ட பதார்த்தங்கள் போன்றவை கேன்சர் ஆபத்தற்ற உணவாகக் கொள்ளலாம்.

கேன்சரைத் தடுக்கும் அற்புத உணவுகள்...

இவற்றைப் பற்றிச் சொல்லும் முன்னர் கேன்சர் எப்படித் தோன்றுகிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

ஹார்மோன்களின் தூண்டுதலால் அல்லது உடலுக்குத் தேவையற்ற கொழுப்பு மற்றும் புகையிலையில் இருந்து வரும் நிக்கோடின் என்ற பொருளின் தூண்டுதலால் கேன்சர் வரும். அவ்வளவுதானே?' என்று உங்களில் பலர் நினைக்கலாம். ஹார்மோன் உள்ளிட்ட விஷயங்கள் தூண்டுகிறதென்றால், அவை நம் உடலில் உள்ள கோடானுகோடி செல்களையும் தூண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறிவிடக் காரணம்? அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

நம் உடலின் செல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத்தான் இருக்கும். ஆனால், ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டிருக்காது. அவற்றுக்கு இடையே இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் (Inter cellular matrix) எனப்படும் திடப்பொருள் சூழ்ந்திருக்கும். வானத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல இந்த திடப்பொருளில் செல்கள் இறைந்து கிடக்கின்றன. எனவே, செல்களைக் 'கட்டி'க் காப்பது இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ்தான். அன்பான கூட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளை, பாதை மாறி தவறான காரியங்களில் ஈடுபடுவது அரிது இல்லையா? அப்படித்தான்... இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் ஆரோக்கியமானதாக இருந்தால் அவற்றில் கலந்துள்ள செல்களும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறாது. அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவுகின்றன.

இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் என்ற அந்தப் பொருள், 1. விட்டமின் 'ஏ' 2. விட்டமின் 'சி' 3. விட்டமின் 'ஈ' 4. செலேனியம் 5.கால்ஷியம் என ஐந்து விதமான தாதுப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.



இவற்றில் நான்காவதாகச் சொல்லப்பட்டிருக்கும் செலேனியம்தான் மிக முக்கியமான பொருள். சொலேனியம் போதுமான அளவு ஒருவர் உடலில் இருந்தால், அவருக்கு எந்தக் கட்டத்திலும் கேன்சரே வராது என அடித்துச் சொல்லலாம். உலக அளவில் 'பிரேசில் நட்' எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் செலேனியம் இருக்கிறது. அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் கொண்டது. காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.

செலேனியம் தவிர, கேரட்டில் உள்ள பீட்டாகெரோட்டின் (Betacarotene) என்ற பொருளில் விட்டமின் 'ஏ' அதிகம் உள்ளது. ஆப்பிள், தக்காளி, நெல்லிக்காய், இஞ்சி, பயத்தம் பருப்பு போன்றவற்றில் விட்டமின் 'சி' உள்ளது. பீட்ரூட், ஆல்மண்ட் அல்லது பாதாம் ஆயில், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றில் விட்டமின் 'ஈ ' உள்ளது. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்ஷியம் உள்ளது.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நாம் நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால், உலகில் கேன்சர் என்ற சொல்லே இருக்காது!